ஆண்டு தோறும் ஜெபமாலை அன்னையின் திருவிழா ஜூலை 7 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை பங்கின் வழக்கப்படி சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இத்திருவிழா ஊரின் சிறப்பான திருவிழாக்களுள் ஒன்று ஆகும்.
ஆண்டின் ஜூலை மாதம் ஏழாம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா ஆரம்பமாகிறது. அன்று மாலை புனித ஜெபஸ்தியாரின் திரு உருவ பவனி நடைபெறுகிறது. பவனியின் நிறைவில் ஆலயத்தின் புகழ்வாய்ந்த கற்கொடிமரத்தில் அன்னையின் கொடி ஏற்றப்படுகிறது. கொடியேற்றத்தின் பின்னர் நவநாள் கொண்டாட்டங்கள் ஆரம்பமாகின்றன. நவநாட்களின் போது காலையில் சிறப்புத் திருப்பலியும், மாலையில் ஜெபமாலை மற்றும் ஜெபமாலை அன்னையின் பிரார்த்தனையுடன் திவ்ய நற்கருணை ஆராதனையும் நடைபெறுகின்றது.
ஒன்பதாம் திருவிழாவன்று காலையில் சிறப்புத் திருப்பலி நடைபெறும். மாலையில் நற்கருணை நாதர் பவனி நடைபெறுகின்றது. அதைத் தொடர்ந்து சிறப்பு மாலை ஆராதனை நடைபெறுகின்றது. அன்று இரவு 10:30 மணிக்கு அன்னையின் தேர்ப்பவனி நடைபெறுகின்றது. ஊரின் அனைத்து மக்களும் மத வேறுபாடின்றி இதில் கலந்து கொள்கின்றனர்.
பத்தாம் திருவிழாவன்று காலை 5:30 மணிக்கு ஆடம்பர கூட்டுத் திருப்பலி நடைபெறுகின்றது. பிற்பகல் 2:00 மணிக்கு அன்னையின் தேர்ப்பவனி நடைபெறுகின்றது. அன்னையின் தேர் மற்றும் அதிதூதரான மிக்கேலின் ரதமும் நிறைவெய்தியவுடன் மாலை ஆராதனையும், அதனைத் தொடர்ந்து கொடியிறக்கமும் நடைபெறுகின்றது.
அடுத்த நாள் பொது விருந்து நடைபெறுகின்றது. ஊர் மக்கள் அனைவரும் சாதி மத வேறுபாடின்றி ஒரே பந்தியில் உணவருந்துகின்றனர்.
|